கோவை: விளையாட்டு விதிமுறைகளை புறந்தள்ளி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுமைய போட்டிகள் ஏனோதானோ என்று நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கல்வி துறை சார்பில் கோவை அ-குறுமையம், கோவை ஆ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம் உட்பட 14 குறுமையங்களுக்கு பல்வேறு இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் அந்தந்த குறுமைய போட்டிகளுக்கு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படியிருக்க, விதிமுறைகளின்படி போட்டிகள் நடத்தப்படுவதில்லை என்பது உடற்கல்வி ஆசிரியர்களின் குமுறல். ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் ஷூ அணியாமல் வெறும் காலிலும், சிலர் செருப்பு அணிந்தும் விளையாடுவதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்கள். இதுபோன்ற போட்டிகள் மாணவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நோக்கத்திலே நடத்தப்படுகின்றன. ஆனால், விதிமுறைகளின்படி நடக்காதது, மாணவர்களுக்கே தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. திறமை இருந்தும் விளையாட்டு சீருடை, ஷூ உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் தோல்வியுறும் பரிதாபம் உள்ளது. பாரதியார் பல்கலையில் நடந்த மேற்கு குறுமைய போட்டிகளிலும் இந்த அவலத்தை காணமுடிந்தது. அதேபோல், போட்டிக்கு வரும் மாணவர்களிடம் சேர், டேபிள், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு, இரு சக்கர வாகனங்களை கொடுத்து வேலை வாங்குகின்றனர். சிறுவர்களான இவர்கள் வாகனம் ஓட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பார்கள் என கேள்வி எழுப்புகின்றனர் மாணவர்களின் பெற்றோர். தகுதி நீக்கம்! ''தடகள விதிமுறைகளின்படி டிராக்கில் வெறும் கால்களில் ஓடக்கூடாது. ஓடும்பொழுது ஷூ கழன்று விழுந்து, வெறும் காலில் ஓடினாலே தகுதி நீக்கம் செய்துவிடுவோம். இப்படியிருக்க, குறுமைய போட்டிகளில் மாணவர்கள் வெறும் காலிலோ, ஷூ அணியாமல் செருப்பு அணிந்தோ பங்கேற்பது வேதனைக்குரியது. முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு இந்தாண்டு ரூ.38.38 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. குறுமைய போட்டிகளுக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் உபகரண தேவைக்காக, அரசு நிதி ஒதுக்கினால் உதவியாக இருக்கும். மாணவர்ளும் விதிமுறைகளின்படி போட்டிகளை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்,'' என்கிறார், கோவை மாவட்ட தடகள சங்க தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன்.