உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூறாவளி காற்றுக்கு 3.26 லட்சம் வாழை சேதம் தோட்டக்கலைத்துறை கணக்கெடுப்பில் தகவல்

சூறாவளி காற்றுக்கு 3.26 லட்சம் வாழை சேதம் தோட்டக்கலைத்துறை கணக்கெடுப்பில் தகவல்

கோவை, ; காரமடை வட்டாரத்தில் வீசிய சூறாவளி காற்று மற்றும் மழைக்கு, 130.44 எக்டேரில், 247 விவசாயிகளின் வயல்களில், மூன்று லட்சத்து, 26 ஆயிரத்து, 100 வாழைகள் சேதம் அடைந்திருப்பது, தோட்டக்கலைத்துறை முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.கோவை மாவட்டம், காரமடை வட்டாரத்தில், 8,000 எக்டர் பரப்புக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதில், 3,525 எக்டரில் பிரதானமாக வாழை பயிரிடப்பட்டுள்ளது.மே, 1, 2 மற்றும், 4ம் தேதிகளில் ஏற்பட்ட சுழல் காற்று மற்றும் மழையால் இரும்பொறை, சின்னக்கள்ளிப்பட்டி, சிக்கதாசம்பாளையம், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையாம்பாளையம், சிறுமுகை, மருதுார் வெள்ளியங்காடு கிராமங்களில் பயிரிடப்பட்ட வாழை சேதமானது. இதன் விபரத்தை, தோட்டக்கலைத்துறையினர் கணக்கெடுத்தனர். அன்னுார், சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த, உதவி தோட்டக்கலை அலுவலர்களும் சேர்க்கப்பட்டு, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 130.44 எக்டேரில், 247 விவசாயிகளின் வயல்களில், மூன்று லட்சத்து, 26 ஆயிரத்து, 100 வாழைகள் சேதம் அடைந்திருப்பது தெரிந்தது.விடுபட்ட விவசாயிகளுக்கான பயிர் சேத கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நிவாரணத் தொகைக்காக, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் ஆவணங்கள் பெறப்பட்டு, சேதத்துக்கான முழு அறிக்கை அரசுக்கு விரைவில் அனுப்ப, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

பாதுகாக்க இதோ வழி

பலத்த காற்றில் இருந்து வாழை மரங்களை பாதுகாக்க, 'எக்ஸ்' வடிவில் இரண்டு குச்சிகளை முட்டுக் கொடுக்க வேண்டும். காற்றின் வேகத்தை தடுக்க, உயிர் வேலி பயிர்களை, வயலை சுற்றி நடவு செய்ய வேண்டும். பலத்த காற்றினால் மரங்கள் சாயாமல் இருக்க அடித்தண்டு பகுதியில் மண் அணைத்தல், காற்று ஊடுருவிச் செல்ல, கீழ்மட்ட இலைகளை அகற்ற வேண்டும், 70-80 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை, அறுவடை செய்ய வேண்டும், என, கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை