கொரோனா சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
கோவை கொரோனாவால் பாதித்தவருக்கு, சிகிச்சை கட்டணத்தை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செங்கந்துறையை சேர்ந்த ருத்ரமூர்த்தி,51, சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால், 2023, நவ., 6ல், பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கான மருத்துவ செலவு தொகை, 1.70 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், ருத்ரமூர்த்திக்கு, ஏற்கனவே ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததாக கூறி, மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை வழங்க மறுத்தனர். இதனால், இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை 1.70 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.