உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா? கிராமங்களில் கணக்கெடுப்பு துவக்கம்

மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா? கிராமங்களில் கணக்கெடுப்பு துவக்கம்

அன்னுார்; ஊராட்சிகளில் உள்ள அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என கணக்கெடுக்கும் பணி துவங்கியது. நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், மழை நீரை முறையாக சேமிக்கவும், அனைத்து அரசு அலுவலக கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி, மழை நீரை சேகரிக்க, அரசு அறிவுறுத்தியுள்ளது.எனினும் இது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என கண்டறிய அனைத்து அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான ஆய்வு கூட்டம் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) ரவீந்திரன் தலைமை வகித்தார்.மண்டல துணை பி.டி.ஓ., க்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் கவுசிகா நீர் கரங்கள் அமைப்பினர் பங்கேற்றனர். ரேஷன் கடை, ஊராட்சி அலுவலக கட்டடம், இ சேவை மையம், மகளிர் குழு வளாகம், அங்கன்வாடி மையம், துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி என அனைத்து அரசு கட்டடங்களிலும் ஆய்வு செய்து கணக்கெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இதையடுத்து நேற்று கணக்கெடுப்பு துவங்கியது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும், ஊராட்சி செயலர்களும் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி