கடந்தாண்டு ரூ.46.81 கோடிக்கு வர்த்தகம்
ஆனைமலை, ; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 46.81 கோடி மதிப்பிலான விவசாய விளை பொருட்கள் கடந்தாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்வதற்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், மறைமுக ஏலம் நடைபெறுகிறது.இத்திட்டத்தின் கீழ், தேங்காய், கொப்பரை, பாக்கு, சுக்கு, வாழை ஆகிய விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.கடந்தாண்டில், விற்பனை கூடத்தில், 46 கோடியே, 81 லட்சத்து, 81 ஆயிரத்து, 423 ரூபாய் மதிப்பிலான, 57 லட்சத்து, 28 ஆயிரத்து, 612 கிலோ வேளாண் விளை பொருட்களான கொப்பரை, தேங்காய், பாக்கு, சுக்கு மற்றும் வாழை போன்றவை மின்னணு தேசிய வேளாண் சந்தை ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில், ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், 709க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். நேரடி விற்பனை
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறியதாவது:பண்ணை வாயில் வணிகத்தில், விவசாயிகளின் இடத்துக்கு வேளாண் அதிகாரிகள் நேரடியாக சென்று, மின்னணு தேசிய வேளாண் சந்தை மறைமுக ஏலத்தை நடத்தி வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்து தருகின்றனர். இதனால், வேளாண் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்து வரும் பயண நேரம், செலவும் தவிர்க்கப்படுகிறது.மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ், கடந்தாண்டு தென்னை விவசாயிகளிடம் இருந்து, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 32 கோடியே, 64 லட்சத்து, 69 ஆயிரத்து, 60 ரூபாய் மதிப்பிலான, 29 லட்சத்து, 25 ஆயிரத்து, 350 கிலோ கொப்பரையை, 1,750 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பு வைப்பு
விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களுக்கு, சந்தை விலை குறைவாக உள்ள காலங்களில் விற்பனை செய்யாமல், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள உலர்களம் மற்றும் சூரிய உலர்த்தியை இலவசமாக பயன்படுத்தி, விளை பொருட்களை நன்கு உலர்த்தி அவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம்.சந்தை விலை அதிகமாக உள்ள காலத்தில், விளை பொருட்களை எடுத்து விற்பனை செய்து லாபம் பெறலாம். இவ்வாறு, சேமித்து வைக்கும் விளை பொருட்களுக்கு குறைந்த வாடகையாக நாள் ஒன்றுக்கு குவிண்டால், 10 பைசா என வசூல் செய்யப்படுகிறது.கடந்தாண்டு, 116.38 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளால் ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டது. இதற்கு வாடகையாக, 82 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. நீரா மையம்
வினியோக தொடர் மேலாண்மை திட்டம் முதன்மை பதப்படுத்தும் மையத்தில், தென்னை மரத்தில் இருந்து நீரா சேகரிக்கப்பட்டு பதப்படுத்தி நீரா பானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மையத்தில், 80 லட்சம் மதிப்பிலான, 80 ஆயிரம் லிட்டர் நீரா பானம் உற்பத்தி செய்யப்படுகிறது.மேலும், நீரா பானத்தில், இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக நீரா சக்கரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நீரா பானம், நீரா சர்க்கரை இயற்கையான முறையில் எவ்வித ரசாயனமும் இன்றி உற்பத்தி செய்யப்பட்டு, நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 6,700 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, ஏழு உலர் கலங்கள், ஒரு சூரிய உலர்த்தி, 25 மெட்ரிக் டன் குளிர்ப்பதன கிடங்கு வசதிகள், விவசாயிகளுக்காகவும், வியாபாரிகளுக்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள், வியாபாரிகள் இவ்வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும், இங்கு நடைபெறும் மின்னணு தேசிய வேளாண் சந்தை மறைமுக ஏலத்தில், விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்து, லாபம் பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.