அம்மா மண்டபம் பராமரிப்பு பணிக்கு ஆய்வு நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சியில், ஒன்றிய நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட 'அம்மா மண்டபம்' பராமரிப்பு பணிகள் குறித்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில், 'அம்மா திருமண மண்டபம்' கடந்த, 2019ம் ஆண்டு, 1.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அப்போதைய எம்.பி., மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டது.பயன்பாட்டுக்கு வராமல் இருந்த மண்டபம், இடைக்காலத்தில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலக கட்டடமாக செயல்பட்டது. மண்டபம் பயன்பாட்டில் இருந்ததால் பராமரிப்புடன் காணப்பட்டது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுமானப்பணிகள் முடிந்ததால் புதிய கட்டடத்துக்கு, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் மாற்றப்பட்டது.அதன்பின், கட்டடம் போதிய பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.'அம்மா மண்டபம்' முன் குப்பை குவியலாக போடப்பட்டு எரிக்கப்பட்டு, சுகாதாரமின்றி அந்த இடமே காட்சியளிக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன், மாவட்ட கலெக்டரிடம், மண்டபத்தை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில், கடந்த மாதம், வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் அந்த கட்டடத்தை நகராட்சியிடம் ஒப்படைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய அதிகாரிகள் கடந்த மாதம், 28ம் தேதி நகராட்சி கமிஷனரிடம், மண்டபத்தை ஒப்படைத்தனர்.மண்டபம் நகராட்சி வசம் வந்ததையடுத்து, அங்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை, நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:'அம்மா திருமண மண்டபம்' நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மண்டபம் ஆய்வு செய்யப்பட்டது. மண்டபத்தை சுற்றியுள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். உடைந்த டைல்ஸ்களை அகற்றி புதிய டைல்ஸ் அமைக்க வேண்டும். இதற்காக தற்போது ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முழு அளவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மன்றத்தில் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.