ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம்; மாணவி தகவல்
மேட்டுப்பாளையம்; 'ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று,பதக்கம் வெல்வதே எனது லட்சியம், என, அரசு பள்ளி மாணவி தபிதா தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தபிதா. இவர் சென்னையில் நடந்த தேசிய சைக்கிளிங் போட்டியில், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி கூறியதாவது:கடந்தாண்டு ராஞ்சியில் நடந்த தேசிய சைக்கிளிங் போட்டியில், பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்றேன். இந்த ஆண்டுக்கான, 76வது தேசிய சைக்கிளிங் போட்டி, சென்னையில் நடந்தது. இதில், 16 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவு சைக்கிளிங் போட்டியில், தனிநபர் மற்றும் குழு போட்டியில் பங்கேற்றேன். இரண்டு போட்டிகளில் முதலிடத்தை பெற்று, தங்கம் பதக்கம் பெற்றேன். தினமும் காலையில், 4 மணி நேரம், மாலையில், 4 மணி நேரம் என, 8 மணிநேரம் பயிற்சி செய்து வருகிறேன்.டெல்லியில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பங்கேற்க, இரண்டு மாதம் தொடர்ச்சியாக பயிற்சியில் பங்கேற்க உள்ளேன்.ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பது எனது லட்சியமாக உள்ளது. இவ்வாறு மாணவி கூறினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி தபிதாவை, தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் ஆசிரியைகள், மாணவர்கள் பாராட்டினர்.