ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை சித்தாபுதூர், ஆர்.வி.என். லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பொன் வேலாயுதம்,74. அரசுத்துறையில் பணியாற்றிய இவர், ஓய்வூதியம் பெறுவோருக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து முறையாக பிரீமியம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவருக்கு குடல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதற்கான மருத்து செலவு தொகை, 54,530 ரூபாயை மருத்துவமனைக்கு செலுத்தினார். பின்னர், மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்க கோரி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்க மறுத்தது.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும்உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ' மனுதாரர் சிகிச்சை பெற்ற தொகையை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குவதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.