பிள்ளைகளிடம் பெற்றோர் தினமும் நிறைய பேச வேண்டும்: மாநகர போலீஸ் கமிஷனர் பேச்சு
கோவை : தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பு, நேற்று துவங்கியது. கோவை அரசு மருத்துவ கல்லுாரியில் நடப்பாண்டில் மொத்தம், 200 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி, மருத்துவ கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார். டீன் நிர்மலா தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுஜாதா முன்னிலை வகித்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:மாணவர்கள் படிக்கும் போது, தெரியாததையும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் கல்லுாரிகளில் அனைவரிடமும் கலந்துரையாட வேண்டும். அப்போது, ஒவ்வொருவரிடமும் இருந்து ஒன்றை கற்று கொள்ள முடியும். மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க ஏதாவது விளையாட்டு, உடற்பயிற்சி, ஓவியம் போன்றவற்றில், ஆர்வம் காட்ட வேண்டும்.மாணவிகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால், கல்லுாரியில் உள்ள 'போலீஸ் அக்காவை' தொடர்பு கொள்ளலாம். நாட்டிலேயே கோவைதான் பாதுகாப்பான நகரம்.மாணவர்கள் பயமின்றி படிக்கலாம். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளிடம் தினமும் பேச வேண்டும். பிள்ளைகளை அதிகம் பேச விட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர். முதலாமாண்டு மாணவர்களை 'ராகிங்' செய்யக்கூடாது என, சீனியர் மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிக்க, சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
டீன் நிர்மலா
நிகழ்ச்சியில், டீன் நிர்மலா பேசுகையில், ''மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவை மருத்துவ கல்லுாரியில், அனைத்து வசதிகளும் உள்ளன. தவறான வழியில் மாணவர்கள் சென்று விடக் கூடாது. ஏதாவது பிரச்னை என்றால் என்னிடமோ, பேராசிரியர்களிடமோ சொல்லலாம்,'' என்றார்.