பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
அன்னுார்: அன்னுார், சத்தி சாலை, இந்திரா நகர் பட்டத்தரசி அம்மன் கோவில் வளாகத்தில் சக்தி விநாயகர், பட்டத்தரசி அம்மன் மற்றும் அண்ணன்மார் சாமிகள் சன்னதிகள் உள்ளன. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிதாக பல்வேறு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 31ம் தேதி காலை 10:00 மணிக்கு அன்னுார் பாத விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 2ம் தேதி காலையில் புதிய விக்ரகங்களை எடுத்து வருதலும், பாத விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் விக்ரகங்களுக்கு கண் திறத்தலும், வேள்வி பூஜையும், சாமிகள் பிரதிஷ்டையும் நடக்கிறது. 3ம் தேதி காலை 10:00 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து மகாபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது.