பீளமேட்டில் மழைநீர் வடிகால் அமைக்க பயனீர் மில் சாலை மக்கள் வலியுறுத்தல்
கோவை, மே 27-கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடந்தது. திரளான மக்கள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர். பீளமேடு மக்கள் அளித்த மனு
கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பீளமேடு, பயனிர் மில் சாலை உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் வடிகால் அமைக்கவில்லை. இங்கே மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் நுழைவதால் சிரமமாக உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்ட பணிகளை காரணம் காட்டி, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை தள்ளிப்போடுகின்றனர். மழைநீர் வடிகால் அமைக்கும் போது, மறு பகுதியில் சாக்கடைக்கால்வாயும் அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. 'டிசி' தர மறுப்பதாக புகார்
கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோர் அளித்த மனுவில், 'தனியார் பள்ளியில், அரசின் கல்வி உதவி திட்டத்தில் எங்கள் மகனை சேர்த்தோம். அரசு கல்வி கட்டணம் 63,000 ரூபாய் செலுத்தவில்லை எனக் கூறி, மாற்று சான்றிதழ் தர மறுக்கிறார்கள். பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர். நிலம் அபகரிப்பு
கோவை சிங்காநல்லூர் கக்கன் நகர் பகுதியை சேர்ந்த சிவகாமி,60, கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 1:00 மணிக்கு வந்தார். தாமதமாக வந்ததால், அவரது புகார் மனுவை பதிவு செய்யாமல் வெளியேற்றினர்.சிவகாமி கூறுகையில், எனது தாத்தா -பாட்டிக்கு, 11 பேர் வாரிசுகள் உள்ளனர். எங்களை ஏமாற்றி மகேந்திரன் என்பவர், பாட்டியின் ரேகையை போலியாக வைத்து, பத்திரம் தயார் செய்து 3 சென்ட் இடத்தை அபகரித்து விட்டார்.இது தொடர்பாக கேட்டால் மிரட்டுகிறார். போலீசில் வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர். வழக்கு தொடர என்னிடம் வசதியில்லை. அதிகாரிகளை சந்தித்து புகார் சொல்ல வந்தால், மனுவை பெறக்கூட யாருமில்லை,'' என்றார். பஞ்சமி நிலத்தை மீட்க மனு
அன்னுார் தாலுகாவுக்குட்பட்ட சாமநாயக்கன்பாளையம் கிராமத்தில் இருந்து திரளாக வந்திருந்த மக்கள், பஞ்சமிநிலங்களை மீட்டு தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, மனு கொடுத்தனர்.