பறக்கும் படை பணியில் ஒதுக்கீடு; உடற்கல்வி ஆசிரியர்கள் நிம்மதி
கோவை; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பறக்கும் படை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், உடற்கல்வி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்கி வரும் ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான பறக்கும் படை பணி பெயர் பட்டியலில் ஒருவர் பெயர்கூட இல்லை என, உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்தனர். தொடர்ந்து, 50:50 என்ற சதவீதம் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் (நிலை-2) ஆகியோரையும் பறக்கும் படையில் நியமிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தினர் கடந்த, 19ம் தேதி மனு அளித்தனர்.உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில், 150 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பறக்கும் படை பணியில் பெரும்பாலும், நாங்கள்தான் இதுவரை பணியமர்த்தப்பட்டு வந்தோம். இந்தாண்டு ஒருவர் பெயர்கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் அளித்த மனுவை ஏற்று தற்போது, 40 உடற்கல்வி ஆசிரியர்கள் பறக்கும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.