ம று படியும் முளைக்கும் விளம்பர பலகைகள்; விதிகளை நீக்க ஐகோர்ட்டில் பொது நல வழக்கு
கோவை,; கோவையில், விளம்பர பலகைகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதை பொருட்படுத்தாமல், விளம்பர பலகைகள் வைப்பதற்கு இஷ்டத்துக்கு அனுமதி அளிக்கும் சட்ட ஷரத்துக்களை நீக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கோவையில் சமீபகாலமாக விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது. சாலை சந்திப்புகள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள, கட்டடங்களில் மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி தரப்படுகிறது.தமிழக நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023ல் உள்ள, சில வரிகளை சுட்டிக்காட்டி, நகரெங்கும் இஷ்டத்துக்கு விளம்பர பலகைகள் வைக்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அனுமதி அளிக்கின்றனர்.இவ்வாறு அனுமதி கொடுப்பதும் தவறானது. பல இடங்களில் அனுமதியின்றியும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வைக்கப்படுகின்றன. இவற்றை நகரமைப்பு பிரிவினர் எடுப்பதே இல்லை. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அவற்றை எடுப்பதில்லை.ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஐகோர்ட்டில் வழக்கு நடப்பதால், அவற்றை அகற்ற முடிவதில்லை. அதற்கு பதிலாக, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறாமல் இருக்க, மறைப்பு ஏற்படுத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் கூறியிருந்தார்.அத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைப்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு முன், விளம்பரங்கள் வைக்க உரிமம் வழங்கும் அதிகாரம் கலெக்டரிடம் இருந்தது; 2023 சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியதும், கட்டுப்பாடு இல்லாமல் வைப்பதோடு, விதிமீறல்கள் பெருகி விட்டன. 'அறிவுறுத்தப்படும்'
சாலை விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக, கலெக்டரிடம் விளக்கம் கேட்டபோது, 'அனுமதியற்ற இடங்களில் வைத்திருப்பதை அகற்றுவது தொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதித்து, அறிவுறுத்தல் வழங்கப்படும்' என்றார்.
ஐகோர்ட்டில் வழக்கு
இண்டியன் ரோடு காங்கிரஸ் (ஐ.ஆர்.சி.,) சாலை பாதுகாப்பு விதிகளை அப்பட்டமாக மீறுவதால், கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.சாலை பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு நகர்ப்புற சட்டங்கள் 2024ல் விதி 322(1)ன் சில ஷரத்துக்களை நீக்க வலியுறுத்தியிருக்கிறார்.ஐகோர்ட் முதல் பெஞ்ச் தலைமை நீதிபதிகள் ஸ்ரீராம், சுந்தர் மோகன் ஆகியோர், மனுவை ஏற்றனர். இதற்கு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையரும், எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.