உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி ரோட்டில் சுரங்க பாதைகள் நீக்கம்; தமிழக நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ்

அவிநாசி ரோட்டில் சுரங்க பாதைகள் நீக்கம்; தமிழக நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ்

கோவை; கோவை அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டுகிறது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,621 கோடி. இதில், ரூ.15 கோடியில் ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைப்பதாக இருந்தது. திட்ட மதிப்பு 1791 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், சுரங்க பாதைகள் மற்றும் சர்வீஸ் ரோடு அமைக்கும் திட்டம் நீக்கப்பட்டுள்ளது. 'மெட்ரோ ரயில்' திட்டத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்க இருப்பதால், ஒரே வேலைக்கு இரண்டு முறை செலவு செய்ய வேண்டாம் என்பதால் நீக்கியதாக, நெடுஞ்சாலை துறை சொல்கிறது. 'மெட்ரோ' திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு, மத்திய அரசுக்கு இப்போது தான் திட்ட அறிக்கை அனுப்பி உள்ளனர். மத்திய அரசு அதற்கான நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டு, வேலை தொடங்கி, சுரங்க பாதை அமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றே தெரியாது. அதுவரை அவிநாசி ரோடை பயன்படுத்துவோர் கதி என்ன? மேம்பாலத்தின் கீழே ஏராளமான பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. மக்கள் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் செல்வது எப்படி? போக்குவரத்து மிகுந்த இந்த ரோடை கடப்பது திடகாத்திரமான மனிதர்களுக்கே சிரமம். பெண்கள், முதியோர், குழந்தைகள் நிலை என்ன? அதை உணர்ந்தே, தமிழக அரசு ஒப்புதல் அளித்த திட்ட அறிக்கையில் சுரங்க பாதைகளுக்கும், சர்வீஸ் ரோடுக்கும் நிதி ஒதுக்கியது. முந்தைய கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்த சிறப்பு சாலை பாதுகாப்பு கூட்டத்தில், சுரங்கப் பாதை அமைக்க வாய்ப்பில்லை என்றால், எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதியுடன் கூடிய ஒரு நடை மேம்பாலம் அமையுங்கள்; பயன்பாட்டை பார்த்து விட்டு, மற்ற இடங்களில் அமைக்கலாம் என அறிவுறுத்தினார். இருந்தும், சர்வீஸ் ரோடு, சுரங்க பாதை நீக்கத்தால், பொதுமக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு பொது நல வழக்கு தொடர தீர்மானித்துள்ளது. அதற்காக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 'சுரங்க பாதை அமைப்பது கட்டாயம் என சாலை விதிகளில் கூறப்பட்டுள்ளது. கோவையில் மாதந் தோறும் 10 பேருக்கு குறையாமல் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளில் 238 பாதசாரிகள் பலியாகி உள்ளனர். பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதியை அரசு அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக புறக்கணிக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி'. 'சுரங்க பாதைகள் மற்றும் சர்வீஸ் ரோட்டை நீக்கியது, பொதுமக்கள் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. ஏற்கனவே திட்டமிட்ட ஐந்து இடங்களில் சுரங்க பாதை அல்லது நடை மேம்பாலம் லிப்ட் வசதியுடன் கட்ட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில், சர்வீஸ் ரோடு போட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், ''கலெக்டரின் உத்தரவை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீறியுள்ளனர். இது, பொறுப்பற்ற அணுகுமுறை. காந்திபுரத்தில் மேம்பாலம் கட்டிய போதும் இப்படித்தான் நடந்து கொண்டனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் முடிவுகளால், பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

A R D SRD
ஜூலை 30, 2025 16:43

மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பமாகி அதன் அமைப்புகளை ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் சுரங்கப்பாதை அமைத்தால் சுரங்க பாதைக்கும் எந்த இடையூறு இல்லாமல் இருக்கும் அதன் அமைப்பை வரைபடத்தை தெரிந்து அதற்கு தகுந்தார் போல் சுரங்கப்பாதை அமைத்தால் நன்மை பயக்கும் அப்படி இல்லாமல் இப்பொழுது சுரங்க பாதை அமைத்தால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் சுரங்கப் பாதைகளை அகற்ற நேரிடும் அதனால் சுரங்கப்பாதை திட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் கணக்கிட்டு சுரங்கப்பாதை அமைப்பது சாலச்சிறந்தது அது மட்டுமல்ல மெட்ரோ ரயில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் சுரங்கப்பாதை இருந்தால் இன்னும் மக்களுக்கு நன்மையை பயக்கும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை மேம்பால பணி முடிந்து வாகனங்களை பாலத்தின் மீது செல்லும் தருவாயில் வாகன நெரிசல் குறைய வாய்ப்புண்டு அப்பொழுது சுரங்கப்பாதை பணியை தொடங்க எளிமையாக இருக்கும்


A R D SRD
ஜூலை 30, 2025 16:39

மெட்ரோ ரயில் தொடங்கினால் அதில் சுரங்கப்பாதை அடிபட்டு போய் விடுமோ என்ற காரணத்தினால் சுரங்கப்பாதை அமைக்காமல் இருந்திருக்கலாம் மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து பிறகு சுரங்கு பாதை அமைத்தால் சுரங்க பாதைக்கு எந்த பாதிப்பும் வராது அதனால் அதனுடைய அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து அதற்கு தகுந்தார் போல் சுரங்கப்பாதை அமைக்கும் பணி செய்யலாம் மற்றும் மேம்பால பணி முடிந்த பிறகு சுரங்கப்பாதை அமைக்க முடியும் ஏனென்றால் அப்பொழுது கணிசமாக வாகன போக்குவரத்துக்கு இடையூறு குறையும் அதனால் சுரங்கப்பாதைகளை பற்றி இப்பொழுது தீர்மானித்தால் அது மற்ற வேலைகளுக்கு இடையூறாக தான் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முடிவுக்கு வந்த பிறகு சுரங்கப்பாதை அமைத்தால் எந்த ஒரு குழப்பமும் இருக்காது அதைத்தான் என்னுடைய கருத்தாக கூறுகிறேன் நன்றி


RajendraK
ஜூலை 30, 2025 11:30

தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளே சட்ட விதிமுறைகளை மீறுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஏற்படும் விபத்துக்களால் உயிர்சேதம் பொருட்சேதம் அதிகமாகி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நேர்மையற்றஸஅரசியல் கட்சிகளும், பொறுப்பற்ற அரசு பணியாளர்களுமே முழுமுதல் காரணம்.


David Raja
ஜூலை 29, 2025 21:30

இது தன நானும் நினைச்சன் 1600 கோடி பாலம் கட்டி மக்களையோட உயிர் ல வளையாடறாங்க மா iruku


A R D SRD
ஜூலை 30, 2025 16:50

சாலை விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை மாறாக வேகமாகவும் மற்றவர்களை பற்றி எந்த கவலை இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதும் இதற்கு காரணமாகும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை ஓட்டுமாறு அங்கு வேக கட்டுப்பாட்டு எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் 80 கிலோமீட்டர் வேகத்திலும் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வாகனங்களால் தான் இந்த வாகன விபத்துகள் நடக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்


புதிய வீடியோ