உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறை - சாலக்குடிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

வால்பாறை - சாலக்குடிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

வால்பாறை; வால்பாறை -- சாலக்குடி இடையே மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என, இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையிலிருந்து, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி அருவி வழியாக, கேரள மாநிலம் சாலக்குடிக்கு அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகின்றன. இது தவிர, சாலக்குடியிலிருந்து மளுக்கப்பாறை வரை நாள் தோறும் ஐந்து முறை கேரள அரசு பஸ் இயக்கப்படுகிறது. வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி வழியாக சாலக்குடிக்கு, இரண்டு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல ஆண்டுகளாக சாலக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால், இருமாநில மக்களும், சுற்றுலா பயணியரும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: தமிழக, கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் சாலக்குடி வழித்தடத்தில் வருகின்றனர். கேரளாவை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வால்பாறையில் வசிக்கின்றனர். மேலும், வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் சாலக்குடி வழித்தடத்திலுள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட அருவி பகுதிக்கு செல்கின்றனர். எனவே, இருமாநில மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் நலன் கருதி அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், சாலக்குடிக்கு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ