உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறமையை நிரூபித்த கிராமப்புற வீரர்கள்

திறமையை நிரூபித்த கிராமப்புற வீரர்கள்

கோவை: குமரகுரு கல்லுாரியில் நடந்த, 'யங் இந்தியன்ஸ் கேலோ கபடி' போட்டியில், ஆண்கள் பிரிவில் பி.ஜே.பிரதர்ஸ் அணியும், பெண்கள் பிரிவில் சிவா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், முதல் பரிசை தட்டின.குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில், 'யங் இந்தியன்ஸ் கேலோ கபடி' போட்டி மூன்று நாட்கள் நடந்தது. கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கல்வி நிறுவனங்கள், கிராமப்புற அணிகள் என, ஆண்கள் பிரிவில், 51 அணிகளும், பெண்கள் பிரிவில், 13 அணிகளும் பங்கேற்றன.ஆண்களுக்கு 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டியின் இறுதிச்சுற்றில், புலியகுளம் பி.ஜே. பிரதர்ஸ் அணி, 36-28 என்ற புள்ளி கணக்கில், அரசூர் கே.பி.ஆர். கல்லுாரி அணியை வென்று, முதல் பரிசை தட்டியது. மூன்றாம் பரிசு 46 தடாகம் அணிக்கும், நான்காம் பரிசு கோபிச்செட்டிபாளையம் ஏ.எம்.கே.சி., அணியினருக்கும் வழங்கப்பட்டது.பெண்கள் பிரிவில், மதுரை சிவா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 25-20 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்று, முதல் பரிசு வென்றது. மூன்றாம் பரிசு பயனீர் கல்லுாரி அணியும், நான்காம் பரிசை, சங்கரா கல்வி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது.இரு பிரிவு அணிகளுக்கும் முதல் பரிசாக, ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7,000 மற்றும் மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்த அணிகளுக்கு, தலா ரூ.2,500 வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, குமரகுரு நிறுவன தலைவர் சங்கர் வாணவராயர் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ