சோலையாறு அணை நீர்மட்டம் 6 நாட்களில் 34 அடி உயர்ந்தது
வால்பாறை, : கடந்த, 6 நாட்களில் சோலையாறு அணையின் நீர்மட்டம், 34 அடி உயர்ந்துள்ளது.வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கி பெய்கிறது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையினால், பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில், நேற்று காலை முதல் வால்பாறையில் மழையின் தாக்கம் குறைந்து, வெயில் நிலவியதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 134.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,402 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 870 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த, 15ம் தேதி, 100 அடியாக இருந்தது. கடந்த 6 நாட்களில், அணையின் நீர்மட்டம், 34 அடி உயர்ந்துள்ளது. இதனால் பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 25, பரம்பிக்குளம் - 14, வால்பாறை - 21, மேல்நீராறு - 23, கீழ்நீராறு - 21, காடம்பாறை - 5, சர்க்கார்பதி - 2, வேட்டைக்காரன்புதுார் - 3, மணக்கடவு - 3, துாணக்கடவு - 7, பெருவாரிப்பள்ளம் - 10 என்ற அளவில் மழை பெய்தது.