சாலை வரி உயர்வு கண்டித்து வேலை நிறுத்தம்
அன்னுார்; சாலை வரி, இன்சூரன்ஸ் உயர்வால் வாடகை உயர்த்தி வழங்க கோரி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் துவக்கி உள்ளனர்.கோயமுத்தூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சாலை வரி உயர்த்தப்பட்டுள்ளது. எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணமும் அதிகரித்துள்ளது. டீசல், எர்த் மூவர்ஸின் உதிரிபாகங்கள், புதிய வாகனம் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.எனவே இவற்றின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏப். 10ம் தேதி முதல், 14ம் தேதி வரை ஐந்து நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும். ஜே.சி.பி., பொக்லைன் உள்ளிட்ட எந்த எர்த் மூவர்ஸ் வாகனங்களும் இயங்காது,' என தெரிவித்துள்ளனர்.இதன்படி அன்னுார், கோவில்பாளையம், சரவணம்பட்டி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொக்லைன், ஜே.சி.பி., வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் புறநகரில் கட்டுமான பணிகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது.