உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர்-பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: சங்கவி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அபாரம்

தினமலர்-பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: சங்கவி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அபாரம்

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் ' ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சுந்தரகவுண்டனுார் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 140 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய்ராம், சுதர்ஷன் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி ஆலோசகர் கோபால்சாமி, பள்ளி முதல்வர் ரமாதேவி, ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். திறமை வெளிப்படும்! பள்ளி முதல்வர் ரமாதேவி கூறுகையில், ''பள்ளியில் நடந்த 'பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டி மாணவர்களின் பொது அறிவு, சிந்தனை திறன், தன்னம்பிக்கையை மேம்படுத்த சிறந்த மேடை. இது மாணவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கிறது. மாணவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வெற்றி, தோல்வி முக்கியமல்ல. அறிவு பெறுதலே உண்மையான வெற்றி. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை வழங்கும், 'தினமலர்' நாளிதழுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

மாணவர்களுக்கு பயனுள்ள இதழ்!

மாணவர் சஞ்சய்ராம்: நான் தினமும், 'தினமலர் -- பட்டம்' இதழை படித்ததால் என்னால் முதலிடம் பெற முடிந்தது. 'பட்டம்' இதழின் வாயிலாக நிறைய பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தது.அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த இதழை படித்தால் பொது அறிவு வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க முடியும். மாணவர் சுதர்ஷன்: தினமும், 'தினமலர் - பட்டம்' இதழை படிப்பதால், பொது அறிவு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இதில், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 'பட்டம்' நாளிதழ் மாணவர்களின் அறிவை வளர்க்கிறது. மாணவர்களுக்கு பயனுள்ள இதழாக உள்ளது. எனவே, அனைத்து மாணவர்களும் 'பட்டம்' இதழ் படிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி