| ADDED : ஜூலை 01, 2025 10:40 PM
கோவை; கோவை தெற்கு வருவாய்கோட்டத்தில் பணிபுரியும், 98 கிராம நிர்வாக அலுவலர்கள், நேற்று இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.கோவை தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பேரூர், மதுக்கரை, சூலுார் ஆகிய தாலுகாக்களில் கனிமவளக்கொள்ளை அதிகமாக இருந்தது. தொடர் கண்காணிப்பு காரணமாக, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் இன்னும் நடக்கிறது. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த கண்காணிப்பு பொறுப்பின் ஆரம்பநிலையில் இருக்கும், கிராமநிர்வாக அலுவலர்கள் 98 பேர், திடீரென்று நேற்று மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார் கூறியதாவது:கோவை தெற்கு கோட்டத்தில், இடமாறுதலுக்கு முன்னதாக அனைவருக்கும் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்தாய்வில், அவரவர் கேட்ட இடம் வழங்கப்படவில்லை.ஒரு முறை, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் பணிபுரிந்தவர்கள், அடுத்தமுறை மற்றொரு கிராமத்தில் பணிபுரிய வேண்டும். இது வருவாய்த்துறை விதிமுறை. அதன் படி, பட்டியல் சேகரிக்கப்பட்டு, இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் செய்யப்பட்டவர்கள், உடனடியாக நாளை (இன்று) பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, ராம்குமார் கூறினார்.