உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளைநிலங்களில் கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகும்! தென்னை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

விளைநிலங்களில் கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகும்! தென்னை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி; 'கோடை உழவு என்பது, பயிர் சாகுபடிக்கான நிலத்தை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் ஒரு உழவு முறையாகும். கோடை உழவு செய்து நிலத்தை தயார்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்,' என, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. நிலை பயிராக தென்னையும், மானாவாரி சாகுபடியாக காய்கறிகள், நிலக்கடலை, வெங்காயம் உள்ளிட்டவையும் செய்யப்படுகின்றன. குறிப்பாக, தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.மழை காலங்களில் கிடைக்கும் நீரை அணைகளில் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், கோடை காலத்தில், கோடை உழவு செய்து நிலத்தை தயார்படுத்தி வைக்க, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர் சேமிப்பு

வெப்பமான கோடை காலத்தில், ஆழமாக கோடை உழவு செய்ய வேண்டும். மாசி மாதம் முதல், வைகாசி வரை, நான்கு மாதங்கள் நிலம் உழவின்றி தரிசாக இருக்கும். பயிரில்லா காலத்திலும் வயலை உழுது புழுதி வாயிலாக மாற்ற வேண்டும்.உழவின் எண்ணிக்கையும், ஆழமும் களையின் தீவிரத்தை பொறுத்தது. 15 - 20 நாட்கள் இடைவெளியில், பருவமழை வருவதற்கு முன், இரண்டு முறை கோடை உழவு செய்ய வேண்டும்.வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கட்டிகள் உடைந்து, மண் அரிப்பு தடுக்கப்பட்டு, சத்துக்கள் இழப்பும் குறைகிறது. மழை காலத்தில் மழைநீர் மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.கோடை உழவில் ஆழமாக உழுவதால், கடினமான மேலோட்டமான மேல் அடுக்கு உடைந்து மண்ணில் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, மண்ணின் ஊடுருவல் திறன் அதிகரிக்கிறது. இது மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து மண்ணின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கிறது.

காற்றோட்டமாகும்

கோடை உழவு மேற்கொள்வதால், மண் குளிர்ச்சியின் காரணமாக மண்ணின் கட்டமைப்பு மேம்படுத்துகிறது. ஆழமாக உழுது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் காற்றோட்டம் மேம்படுகிறது.மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரிக்கிறது. மண்ணில் கரிம பொருட்களின் கலவை துரிதப்படுத்துவதால் பயிர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் வாயிலாக வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவடையும் என, பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.ஆழியாறு பகுதியில் வேளாண் கல்லுாரி மாணவியர், கோடை உழவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். கோடை உழவால் ஏற்படும் நன்மைகள்; மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கத்துக்கு கோடை உழவு உதவும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாக்டீரியாக்கள் அழியும்!

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி கூறியதாவது:மழைநீரை உறிஞ்சும் திறன் மண்ணில் அதிகரிப்பதால், வளி மண்டல நைட்ரஜன் நீரில் கலந்து மண்ணுக்குள் சென்று மண்வளத்தை அதிகரிக்கிறது.பெரும்பாலான பூச்சிகள் வெப்பமான கோடையில் மண்ணின் மேல் அடுக்கு அல்லது குச்சிகளுக்கு அடியில் இருக்கும். கோடை உழவு செய்யும் போது, சூரிய கதிர்கள் மண்ணில் நுழைகிறது.மண் வாயிலாக பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.பூச்சிக்கொல்லி பயன்பாடும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது.கோடை உழவின் காரணமாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வித்துகள், பூஞ்சை நுண்ணுயிர்கள் இறக்கின்றன. கோடை உழவு மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை நுாற்புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப்படுகிறது. எனவே, விவசாயிகள், கோடை உழவு செய்து சாகுபடிக்கேற்ப நிலங்களை தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை