மு தியோரை கவனித்துக் கொள்வது இளைஞர்களின் தலையாய கடமை
ஒ வ்வொரு ஆண்டும் அக். 1ம் தேதி, உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்வின் அடித்தளமாக திகழ்ந்து, அனுபவங்களின் பொக்கிஷமாக விளங்கும் அவர்களின் அருமையை உணர்த்தும் தினமாகும். சொல்லப்போனால், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுபவர்கள் முதியோர்களே. ஆனால், நமது சமூகத்தில் அவர்கள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறார்கள்; அவர்களின் தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. ஓய்வூதியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆதரவற்ற முதியோர் பலரை பராமரித்து வரும்,'ஈரநெஞ்சம்' அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன்கூறியதாவது: முதியோர் என்பவர் வயது கூடி விட்டவர் அல்ல; அவர்கள் வாழ்வின் நீண்ட பயணத்தில் அனுபவங்களைத் தாங்கி நிற்கும் மனிதர்கள்.நம் வாழ்வை உருவாக்கிய, நம் வளர்ச்சிக்காக பல தியாகங்கள் செய்தவர்கள். அவர்களின் சுருங்கிய கரங்கள் உழைப்பின் அடையாளங்கள். இன்று பல முதியோர் தனிமையிலும், ஆதரவற்ற நிலையிலும் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. குடும்பத்துடன் இருக்கும் பலர், பாசம் கிடைக்காமல் தவிக்கின்றனர். முதியோரை பராமரிப்பது எளிதானதல்ல. அதிக பொறுமையும், கரிசனமும், அன்பும் அவசியம். அவர்களின் உடல் சோர்ந்தாலும், மனம் இன்னும் அன்பை நாடிக்கொண்டிருக்கிறது. முதியோரைப் பார்த்துக் கொள்வது, இளைஞர்களின் தலையாய கடமை. நம்மை ஒருநாள் சுமந்து வளர்த்தவர்களை, இன்று அவர்கள், நம் ஆதரவை நாடும்போது, புறக்கணிப்பது மனிதநேயத்துக்கு எதிரானது. இவ்வாறு, அவர் கூறினார்.
'நாமும் ஒருநாள் முதியவர் ஆவோம்'
''முதியோரின் அனுபவத்தை மதியுங்கள்; அவர்களின் தனிமையைப் போக்க அன்புடன் அருகில் இருங்கள்; அவர்களது வாழ்வின் இறுதிக்காலத்தை மரியாதையுடன், பாசத்துடன் நிறைவேற்றுங்கள்; முதியோரை மதிப்பது, நம் எதிர்காலத்தை மதிப்பதற்கு சமம். ஏனெனில், நாமும் ஒருநாள் முதியோராவோம்,'' என்கிறார் மகேந்திரன்.