எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக 2030ல் தமிழகம் மாறி விடும்
கோவை; கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ளது, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். இம்மையத்தில் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தின் மாவட்ட திட்டமேலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் உள்ள, பத்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், ஆணுறைகளை இலவசமாக பெற்று செல்கின்றனர். இது தவிர, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, நம்பிக்கை மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் மாதத்திற்கு 30 ஆயிரம் ஆணுறை தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது. இது தற்போது 50 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. மக்களிடம் ஆணுறை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு ஆணுறையோடு, ஒருவித எண்ணெய் அடங்கிய பாக்கெட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போதைய புள்ளிவிபரங்களின் படி தமிழகத்தில், 0.18 சதவீதம் பேருக்கே எய்ட்ஸ் நோய் உள்ளது. அதையும் குறைத்து, 2030ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயாளிகள் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழப்போகிறது. அதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.