ஆடி அமாவாசையையொட்டி பேரூர் படித்துறையில் தர்ப்பணம்
தொண்டாமுத்துார்; பேரூர் படித்துறையில், ஆடி அமாவாசையையொட்டி, பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு, அவர்களின் சந்ததியினர், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடிப்பெருக்கு தினங்களில், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். ஆடி அமாவாசை தினமான நேற்று அதிகாலை முதலே, தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், பேரூர் படித்துறையில் திரண்டனர். அங்கு, புரோகிதர் முன்னிலையில், முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும், ஏழை எளிய மக்களுக்கு, அன்னதானமும் கொடுத்து சென்றனர். கோவிலில், நெய் விளக்கு ஏற்றியும் பொதுமக்கள் வழிபட்டனர். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட புதிய தர்ப்பண மண்டபம் மற்றும் ஆற்றின் கரையில் இருந்த பழைய தர்ப்பண மண்டபத்திலும், ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால், பேரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.