கால்வாயை துார்வார கமிஷனர் உத்தரவு
கோவை; மாநகராட்சி, 78வது வார்டு பேரூர் ரோடு, செல்வபுரம், 79வது வார்டு தெலுங்குபாளையம் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.தெலுங்குபாளையம் ரோடு, எம்.ஜி.ஆர்., நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.தெலுங்குபாளையம் பகுதிகளில் கடக்கும் கால்வாயை, உடனடியாக துார்வார உத்தரவிட்டார். கரும்புக்கடை பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை, கழிப்பிடங்கள் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்த அவர், தேவையான கூடுதல் வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.