வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆத்து பாலத்திலிருந்து வெள்ளளூர் குளத்திற்கு செல்லும் ராஜ வாய்க்காலில் புதர் மண்டிக்கிடக்கின்றது , தயவுகூர்ந்து பொதுப்பணித்துறை வாய்க்காலை சுத்தம் செய்து வெள்ளளூர் குளத்திற்க்கு நீர் செல்வதை உறுதி செய்யவேண்டும். நன்றி
கோவை : கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, வழியோர குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில், தேங்கியுள்ள பழைய நீரை வெளியேற்றி விட்டு, நொய்யல் ஆற்று நீரை தேக்க,பெரு முயற்சி எடுக்கப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி, கோவை அமைந்திருக்கிறது. தென்மேற்கு பருவ மழை காலத்தில், கேரள வனப்பகுதியில் பெய்யும் மழை நீர், கிளை ஆறுகளாக உருவெடுத்து, வழிந்தோடி வந்து, நொய்யலில் கலக்கிறது.பருவ மழை காலத்தில் பெய்யும் மழை நீரை, குளங்களில் தேக்கி வைத்து, ஆண்டு முழுவதும் பாசனத்துக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.கோவை குற்றாலத்தில் மழைப்பொழிவு தொடர்கிறது; நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நொய்யலில் வெள்ளப்பெருக்கு
கடந்த, 24ம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகியுள்ள, கிளை ஆறுகளில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீரால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.வினாடிக்கு, 950 கன அடி தண்ணீர் செல்கிறது. சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் இருந்து, குளங்களுக்கான வழங்கு வாய்க்கால் திறந்து விடப்பட்டுள்ளது; வினாடிக்கு, 75 கன அடி தண்ணீர் செல்கிறது.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, ஒன்பது குளங்களில் தேங்கியுள்ள பழைய நீரை வெளியேற்றி விட்டு, நொய்யல் ஆற்று நீரை தேக்க, பெருமுயற்சி எடுக்கப்படுகிறது. அதனால், நீர் வழங்கு வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கும் பணி நடந்து வருகிறது. வாய்க்காலில் அடைப்பு
வேடப்பட்டி அருகே, நாகராஜபுரம் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது; மாநகராட்சியால் துார்வாரப்பட்டு, நரசாம்பதி குளத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.குனியமுத்துார் அணைக்கட்டில் இருந்து கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் குளம், குனியமுத்துார் செங்குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குளத்துக்கும் தலா, வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.பேரூர் படித்துறை மற்றும் கோயமுத்துார் அணைக்கட்டு பகுதியை, வினாடிக்கு, 750 கன அடி தண்ணீர் கடந்து செல்கிறது. ஆண்டிபாளையம் பிரிவில் இருந்து சேத்துமா வாய்க்கால் வழியாக உக்கடம் பெரிய குளத்துக்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதர்மண்டிய வாய்க்கால்
வினாடிக்கு, 75 கன அடி தண்ணீர் செல்லும் வகையில், மதகுகள் திறக்கப்பட்டன. ஆனால், செல்வபுரம் முத்துசாமி காலனி விரிவு பகுதியில், வாய்க்கால் புதர்மண்டிக் கிடக்கிறது; நாணல் புற்கள் வளர்ந்திருக்கின்றன. அவை அகற்றப்படாமல் இருந்தன. அப்பகுதியில் இருந்த அடைப்புகள், நேற்று அகற்றப்பட்டன. வாய்க்கால் தண்ணீர் பொங்கி, குடியிருப்புக்குள் புகும் சூழல் இருந்ததால், வினாடிக்கு, 50 கன அடியாக தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.பேரூர் படித்துறையில் இரு கரையை தொட்டு, தண்ணீர் செல்கிறது. குறிச்சி குளத்துக்கும் தண்ணீர் திருப்பி விடப்பட்டிருக்கிறது. உக்கடம் மற்றும் குறிச்சி குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள அடைப்புகள், அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் குளத்தை சென்றடையும்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'திங்கள் முதல் வெள்ளி வரை குளங்களுக்கு நீர் வழங்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும். சனி, ஞாயிறுகளில் ஆற்றில் விடப்படும். கடை மடை விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில், தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. குளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.
ஆத்து பாலத்திலிருந்து வெள்ளளூர் குளத்திற்கு செல்லும் ராஜ வாய்க்காலில் புதர் மண்டிக்கிடக்கின்றது , தயவுகூர்ந்து பொதுப்பணித்துறை வாய்க்காலை சுத்தம் செய்து வெள்ளளூர் குளத்திற்க்கு நீர் செல்வதை உறுதி செய்யவேண்டும். நன்றி