பாடம் இல்லை, ஆசிரியர் இல்லை; ஆனால் தேர்வு மட்டும் உண்டு
அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், பெரும்பாலான நடுநிலைப்பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. ஆனால் இன்று தேர்வு நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு நேற்று துவங்கியது. வரும் 26 ம் தேதி முடிவடைகிறது. இன்று (16ம் தேதி) உடற்கல்வி தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அன்னுார் வட்டாரத்தில் 16 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி கற்பிக்க உடற் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. இதனால் மாணவர்களுக்கு உடற் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. மேலும் உடற்கல்விக்கு தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன என்பதும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால் தேர்வு மட்டும் நடைபெறுகிறது. பெயருக்கு தேர்வு நடத்திவிட்டு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது மாணவர்களின் கற்றலில் பின்னடைவை ஏற்படுத்தும். கல்வியைப் போல் உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்.எனவே உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.