தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி உடனுக்குடன் பதிலளித்து அசத்திய மாணவர்கள்
கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் உடனுக்குடன் பதிலளித்து அசத்தினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி-வினா- விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த மாதம், 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.இதில், இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மில்லெனியம் பள்ளி
நேற்று, சோமையம்பாளையம், தி பி.எஸ்.பி.பி., மில்லெனியம் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 135 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'பி' அணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக், சக்திவேல் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஸ்வர்ணலட்சுமி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் லதா, தமிழாசிரியை விஜயசகுந்தலா உள்ளிட்டோர் உடனிருந்தனர். லிஸ்யு மெட்ரிக் பள்ளி
சாய்பாபாகாலனி, லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், 140 பேர் தகுதிச் சுற்றுக்கான தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா நடத்தப்பட்டது.இதில், 'எப்' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் நவநீத், பிளஸ்1 மாணவர் யுவனேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் ஜாய் அரக்கல் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கம் ஆனந்தகுமார், ஆசிரியர் மஞ்சுளா சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.