ரேஷன் அரிசி வழக்கில் ஆஜராகாமல் உள்ளோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் ஈடுபட்ட நபர்கள், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில், கவுண்டம்பாளையம் பெருமாள்,28, சென்னை வலசரவாக்கம் ராமச்சந்திரன்,61, கோவை உக்கடம் ஜி.எம்.நகர் அசாருதீன்,23,கோவை இருகூரை சேர்ந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்,4ல் நடைபெற்று வருகிறது.வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றத்தில் நேரிலோ, வக்கீல் வாயிலாகாவோ ஆஜராகும்படி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், சம்மன் வழங்க சம்பந்தப்பட்ட முகவரிகளுக்கு சென்ற போது அவர்கள் அங்கு வசிக்கவில்லை. அவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு குறித்து அறிவிப்பு செய்தும், தவறும் பட்சத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.