இம்மாதம் கோடை விழா நடத்த சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
வால்பாறை, ;வால்பாறையில் மே மாதம் இறுதியில் கோடை விழா நடத்த வேண்டும் என சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், கோடை விழா நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில், ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப்படுகிறது.இதற்காக, ஆண்டு தோறும் ஊட்டியிலிருந்து மலர்கள் கொண்டுவரப்பட்டு, மலர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக வால்பாறையில் கோடை விழா நடத்தப்படவில்லை.இந்நிலையில், வால்பாறையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மே மாத இறுதியிலாவது கோடை விழா நடக்குமா என்பது, சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இது குறித்து, சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறையில் பொழுதுபோக்கு அம்சமாக குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களை மகிழ்விக்கும் வகையில், மே மாதம் வால்பாறையில் கோடை விழா நடத்தினால்மகிழ்ச்சியாக இருக்கும்,' என்றனர்.இது குறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடத்துவது குறித்து, அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. உத்தரவு வந்தால் வால்பாறையில், மாத இறுதியில் கோடை விழா நிச்சயமாக நடத்தப்படும்,' என்றனர்.