அபகரித்த நிலத்தை கேட்டுபழங்குடியினர் போராட்டம்
கோவை, டிச. 19- சீங்குழி, கோப்பனாரி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பழங்குடியின மக்களிடம் வனத்துறை அபகரித்த நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் காத்திருப்பு போராட்டத்திலும் பழங்குடியின மக்கள் ஈடுபட்டனர். தமிழக அரசின் வன உரிமைச்சட்டம் 2006 ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், மனைப்பட்டா, இனச்சான்று வழங்க வேண்டும், வங்கியில் வட்டியில்லா கடன் தர வேண்டும், மாநகராட்சியின் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிலம் கொடுத்த பழங்குடிகளுக்கு அரசுப்பணி தர வேண்டும் என்பவை உள்ளீட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். பழங்குடிகளின் நிலங்களை பழங்குடி அல்லாதவர் வாங்கினால் செல்லாது என்ற அரசாணையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்; பழங்குடி கிராமங்களில் அபகரித்த நிலங்களை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தினர். கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நடத்திய ஆர்பாட்டத்திலும் காத்திருப்பு போராட்டத்திலும் சங்க செயலாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். மா.கம்யூ. மாவட்ட செயலாளர் பத்மநாபன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி ஆகியோரும் பேசினர்.