உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுந்தராபுரம் சந்திப்பில் யூ டேர்ன் வசதி; சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு பரிந்துரை

சுந்தராபுரம் சந்திப்பில் யூ டேர்ன் வசதி; சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு பரிந்துரை

கோவை : கோவை - பொள்ளாச்சி ரோட்டில், சுந்தராபுரம் சந்திப்பில், 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்த, சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.கோவை - பொள்ளாச்சி ரோட்டில், சுந்தராபுரம் சந்திப்பு மிக முக்கியமானது. 'பீக் ஹவர்ஸில்' வாகனங்கள் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, 'யூ டேர்ன்' வசதி செய்யலாமா என சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர், சுந்தராபுரம் சந்திப்பை கடந்து செல்லும் வாகனங்களை கண்காணித்து, கமிட்டிக்குபரிந்துரை வழங்கியுள்ளனர்.* கோவையில் இருந்து வருவோர் பொள்ளாச்சி நோக்கிச் செல்வதற்கு, இடதுபுறம் சங்கம் வீதியில் திரும்பி, சற்று துாரம் சென்று, வலது புறம், சாரதா மில் ரோட்டுக்குச் சென்று, பொள்ளாச்சி ரோட்டில் இணைந்து செல்ல வேண்டும். போத்தனுார் செல்வதற்கு, சங்கம் வீதியில் இருந்து இடது புறம் திரும்பிச் செல்வதில் மாற்றம் இல்லை.* போத்தனுார் சாரதா மில் ரோட்டில் இருந்து சுந்தராபுரம் நோக்கி வருவோர், சங்கம் வீதிக்கு திரும்ப முடியாது; நேராகச் சென்று பொள்ளாச்சி ரோட்டில் இணைந்து, தக்காளி மார்க்கெட் முன் வலது புறம் திரும்பி, சுந்தராபுரம் சந்திப்புக்கு வர வேண்டும்.* பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிச் செல்வோர், சுந்தராபுரத்தில் சிக்னலில் நிற்காமல் நேராக செல்லலாம்.* மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் வரு வோர், கோவையை நோக்கி நிற்காமல் செல்லலாம்; போத்தனுார் செல்ல வேண்டுமெனில், 'யூ டேர்ன்' அமைக்கும் பகுதியில் வலது புறம் திரும்பி, சங்கம் வீதி வழியாக சாரதா மில் ரோட்டுக்கு செல்லலாம்.இவ்வாறு, பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் பரீட்சார்த்த முறை

நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், 'சுந்தராபுரம் சந்திப்பில் சிக்னல் முறையை அகற்றி விட்டு, 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பரீட்சார்த்த முறையில் வாகனங்களை இயக்கி, சோதித்துப் பார்க்கப்படும். சின்ன, சின்ன பிரச்னைகள் வரும். நடைமுறை சிக்கல்கள் வரும்போது, அதற்கான தீர்வுகள் ஏற்படுத்தப்படும்' என்றனர்.

செல்ல வழி கிடையாது

கோவையில் இருந்து வருவோர் சுந்தராபுரம் சந்திப்பை கடந்து, மதுக்கரை மார்க்கெட் செல்வோருக்கு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. சங்கம் வீதி வழியாக, சாரதா மில் ரோட்டுக்கு சென்று, பொள்ளாச்சி ரோட்டுக்கு வந்து, தக்காளி மார்க்கெட் அருகே உள்ள குறுக்கு வீதிகள் வழியாக, வாகனங்களை அனுப்பலாமா என ஆலோசிக்கப்படுகிறது. இவ்வழித்தடம் மிகவும் குறுகலானது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால், சாலை பாதுகாப்பு குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !