வங்கிகளில் உரிமை கோரப்படாத கணக்குகள்: தொகையை பெற வழிகாட்டுகிறது ஆர்.பி.ஐ.
- நமது நிருபர் --: உரிமை கோரப்படாத வங்கி கணக்கு தொகையை உரியவர்களிடம் திருப்பி வழங்க, அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. வங்கிகளில் உரிமை கோரப்படாமல் வைப்பு நிதி, சேமிப்பு கணக்குகளில் தேங்கியிருக்கும் தொகையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. உரிமைக் கோரப்படாத சேமிப்பு என்பது, 10 ஆண்டுகளாக வங்கிச் செயல்பாடு இல்லாத சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை அல்லது முதிர்வுத் தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் உரிமை கோரப்படாத டெபாசிட்கள் ஆகும். இந்த தொகை, ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படும் 'டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவேர்னஸ் (DEA) ' நிதிக்கு மாற்றப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உரிய வட்டியுடன் திரும்பப் பெறலாம். வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களின் சட்டபூர்வ வாரிசுகள் எந்த நேரத்திலும் அந்தத் தொகையை கோரலாம். இதற்கு கால வரையறை கிடையாது. இதற்கு, அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்று, அடையாளம் மற்றும் கணக்கு உரிமையை நிரூபிக்கும் கே.ஒய்.சி., ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கவும் (ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவை).சரிபார்ப்பு முடிந்ததும், குறிப்பிட்ட நபர்களுக்கு தொகை வழங்கப்படும். விவரங்களுக்கு, ஆர்.பி.ஐ., அக்., -டிச., மாதங்களில் நடத்தும் சிறப்பு முகாம்களில் கலந்துகொள்ளலாம். உங்களுக்கு செயலற்ற கணக்குகள் உள்ளனவா என்பதை உங்கள் வங்கியில் அல்லது RBI யின் UDGAM (Unclaimed Deposits Gateway to Access Information) போர்டல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இதற்காக, udgam.rbi.org.inஇணையதளத்துக்கு சென்று, உங்கள் மொபைல் எண், பெயர், கடவுச்சொல் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, OTP வாயிலாக சரிபார்க்க வேண்டும். உள்நுழைந்து 'Individual' தகவலைத் தேர்ந்தெடுக்கவும். விரைவில் இணைப்பு கணக்குதாரரின் பெயர் மற்றும் வங்கியின் பெயர் (அல்லது 'All' எனத் தேர்ந்தெடுத்து அனைத்து வங்கிகளிலும் தேடலாம்). அடையாள ஆவண விவரங்களை ( PAN / வாக்காளர் அட்டை/பாஸ்போர்ட்/ஓட்டுநர் உரிமம்/பிறந்த தேதி) உள்ளிடவும். பின், Search ' என்பதை கிளிக் செய்தால், உங்கள் பெயரில் பொருந்தும் தகவல் இருந்தால், அந்த வங்கியின் பெயர் மற்றும் Unclaimed Deposit Reference Number (UDRN) காணப்படும்.தற்போது, 30 வங்கிகள் UDGAM போர்டலில் இணைக்கப்பட்டுள்ளன. இவை டி.இ.ஏ., நிதியில் உள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மீட்கப்படாத வைப்புகளை கையாளுகின்றன. மீதமுள்ள வங்கிகள் விரைவில் இணைக்கப்படவுள்ளன. மீட்கப்படாத வைப்புகளை குறைப்பதும், எதிர்காலத்தில் புதிய வைப்புகள் டி.இ.ஏ., நிதிக்கு செல்லாமல் தடுப்பதும், இத்திட்டத்தின் நோக்கம்.