உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவசரத் தேவை! வாகன நெரிசலை தவிர்க்க மறுசீரமைப்பு தேவையற்ற இடங்களில் வேண்டாம் ‘யு–டர்ன்’

அவசரத் தேவை! வாகன நெரிசலை தவிர்க்க மறுசீரமைப்பு தேவையற்ற இடங்களில் வேண்டாம் ‘யு–டர்ன்’

கோவை: மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, உடனடியாக சில மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோவை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு போன்ற முக்கிய வழித்தடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைத்தும், சில இடங்களில் நெரிசல் தொடர்கிறது. இதை தவிர்க்க, சில இடங்களில் போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து ‘யு–டர்ன்’ அமைக்கின்றனர். லட்சுமி மில்ஸ், சிந்தாமணி மற்றும் வடகோவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், போக்குவரத்து சிக்னல்களில் இருந்து கணிசமான தொலைவில் ‘யு–டர்ன்’ அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேட்டுப்பாளையம் ரோட்டில் முன்பு ஜீவா நகர் திரும்பும் இடத்தில் யு–டர்ன் இருந்தது. தற்போது எருக்கம்பெனி அருகே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையத்தில் இருந்து வருபவர்கள், ஜீவா நகர் செல்ல சாய்பாபா காலனி புதிய மேம்பாலத்தின் கீழ் சென்று எம்.ஜி.ஆர்.மார்க்கெட் எதிரே உள்ள, ‘யு–டர்ன்’ல் திரும்பி ஜீவா நகர் செல்ல வேண்டும். துாரம் என கருதி அமைக்கப்பட்ட யு–டர்ன் வழியாக, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் விதிமீறி செல்வது விபத்துக்கும், நெரிசலுக்கும் வழிவகுத்துள்ளது. ரேஸ்கோர்சில் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட டிராபிக் ஐலேண்ட், ரோட்டின் பெரும்பகுதியை அடைத்துள்ளது. இதுபோன்ற இடங்களில் மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. ‘‘டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே, சுங்கம், கருப்பகவுண்டர் வீதி, சுந்தராபுரம் போன்ற இடங்களில் யு–டர்ன்களை, உடனடியாக அறிவியல் பூர்வமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். முக்கியமாக அரசு மருத்துவமனை அருகில் உள்ள சந்திப்பு. குறுகலான திருப்பு பாதைகளில் வாகனங்கள் சிரமப்படுகின்றன. சுங்கம், வடகோவை, சிந்தாமணி போன்ற இடங்களில் பெரிய போக்குவரத்து தீவுகள் சாலை பரப்பை ஆக்கிரமித்துள்ளன. சீரான போக்குவரத்து இயக்கம் இதனால் தடைபடுகிறது. விலைமதிப்பற்ற பணி நேரம், எரிபொருள், ஆற்றல், உற்பத்தித்திறன் வீணாகிறது. தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில் மட்டும், தீவுகள், ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும். நெரிசலை ஏற்படுத்தும் முக்கிய இடங்களை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து தீர்வு காண்பது அவசியம்,’’ என மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி கமிஷனர், போக்குவரத்து போலீசாரிடம், ‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை’ தலைவர் ஜெயராமன், செயலாளர் ராஜேந்திரன் முறையிட்டுள்ளனர். தினமுமா நடக்கிறது ஆர்ப்பாட்டம்? ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன், ஜவான் பவன் பில்டிங் இடையே கிழக்கு–மேற்கு ரோட்டின் கணிசமான பகுதி அனாவசியமாக மூடப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக மாறி, நெரிசலுக்கு வழிவகுக்கிறது. ஹுசூர் ரோட்டில் இருந்து வரும் சில வாகனங்கள் நேராக ஒன்வேயில் ஜவான் பவன் நோக்கி வருவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இந்த ரோட்டை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடலாம். ஆர்ப்பாட்டம் நடக்கும்போது மட்டும் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GOPALAN
செப் 07, 2026 05:01

There are several places where the U turn system is not effective and does not surve the purpose. instead it is adding to more traffic congestion. Buses and Lorries can't take U turns in one attempt and it leads to congestion If the road is not wide enough. Wrong spots are chosen for such U turns. For example the U turn spots at GH and Farmers market on Trichy road. Similar problem at several spots on MTP road. It is high time the authorities rethink and devise a better method than the U turn.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை