குடிநீர் குழாய் உடைப்பு; சீரமைப்பு பணி தீவிரம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராஜாமில் ரோடு சந்திப்பு பகுதியில், குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள மக்களுக்கு, அம்பராம்பாளையம் ஆற்றில் நீர் எடுத்து, சுத்திகரித்து, மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.நகரப்பகுதியில்,ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், வெங்கடேசா காலனி தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து செல்லும் குடிநீர் பகிர்மான குழாயில், ராஜாமில் ரோடு - தபால் அலுவலக ரோடு சந்திப்பு பகுதியில், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே உடைப்பு ஏற்பட்டது.குடிநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தம் செய்து, உடைப்பு ஏற்பட்ட இடத்தில், 'பொக்லைன்' கொண்டு தோண்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வெங்கடேசா காலனி தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து, பகிர்மான குழாய் வழியாக ெஷரிப் காலனி, ஏ.பி.டி.,வீதி, மார்க்கெட் ரோடு, திருநீலகண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இங்குள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டவுடன், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும். குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படும்.இவ்வாறு, கூறினர்.