உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 57,691 தொழிலாளர்களுக்கு ரூ.87.72 கோடி நலத்திட்ட உதவிகள்; சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி தகவல்

57,691 தொழிலாளர்களுக்கு ரூ.87.72 கோடி நலத்திட்ட உதவிகள்; சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி தகவல்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் தொழிலாளர் துறை வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் 57,691 தொழிலாளர்களுக்கு ரூ.87.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (பொறுப்பு) சுபாஷ் சந்திரன் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் உதவி கமிஷனர், சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகம் வாயிலாக 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில், பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், கண்கண்ணாடி, மாதாந்திர, ஒய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு அல்லது தொழிலாளர்களுக்கு 300 சதுர அடி அளவுள்ள சொந்தமான காலி இடத்தில் தானே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு ரூ.4 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகையாக 42,553 தொழிலாளர்களுக்கு ரூ.8 கோடியே 78 லட்சத்து 53 ஆயிரத்து 350, திருமண உதவித்தொகையாக 994 தொழிலாளர்களுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம், மகப்பேறு உதவித் தொகையாக 8 தொழிலாளர்களுக்கு ரூ.27 ஆயிரம், கண்கண்ணாடி உதவித்தொகையாக 69 தொழிலாளர்களுக்கு ரூ.39 ஆயிரத்து 750, இயற்கை மரண உதவித்தொகையாக 1,270 தொழிலாளர்களுக்கு ரூ. 4 கோடியே 51 லட்சத்து 6 ஆயிரம், விபத்து மரண உதவித்தொகையாக 28 தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சத்து 50 ஆயிரம், பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையாக 23 தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 691 தொழிலாளர்களுக்கு ரூ. 87 கோடியே 72 லட்சத்து 18 ஆயிரத்து 172 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ