உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் அறையை சேதப்படுத்திய காட்டு யானைகள்; போராட்டத்தில் ஈடுபட்ட டான்டீ தொழிலாளர்கள்

கோவில் அறையை சேதப்படுத்திய காட்டு யானைகள்; போராட்டத்தில் ஈடுபட்ட டான்டீ தொழிலாளர்கள்

கூடலுார்; கூடலுார் பாண்டியார் 'டான்டீ' தேயிலை தோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஸ்டோர் அறையை காட்டு யானைகள் சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்ட நிறுவனத்தில் (டான்டீ) தொழிலாளர்கள் குடியிருப்புகள் அருகே மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று, காலை அப்பகுதிக்குள் நுழைந்த யானைகள், கோவில் ஸ்டோர் அறை மற்றும் அதிலிருந்த ராமர் பஜனை பொருட்கள், கோவில் சமையல் பாத்திரங்கள், பீரோ, அம்மன் அலங்கார உடைகளை சேதப்படுத்தின. தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் யானைகளை விரட்டினர்.தகவல் அறிந்த அதிர்ச்சி அடைந்த டான்டீ தொழிலாளர்கள், பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நெல்லியாளம் நகராட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாடுகாணி வனக்காப்பாளர் தம்பா அப்பகுதியில் ஆய்வு செய்து, 'காட்டு யானைகளால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். காட்டு யானைகள் இப்பகுதிக்கு வராமல் கண்காணிக்கப்படும்,' என, உறுதியளித்தார். அதனை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உயிர் தப்பிய வன ஊழியர்கள்...

கூடலுார் ஓவேலி பகுதியில், வனத்துறையினர் இரவில் வாகனத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட போது, சாலையோரம் இருந்த காட்டு யானையை சப்தமிட்டு விரட்டினார். சிறிது துாரம் ஓடிய காட்டு யானை, திடீரென திரும்பி வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டி, முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது. அதிர்ச்சியடைந்த வன ஊழியர்கள் தொடர்ந்து சப்தமிட்டு யானையை விரட்டி உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை