சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நாய்கள் தொல்லை அதிகமிருப்பதால் மக்கள் அச்சத்துடனேயே தெருக்களில் சென்று வருகின்றனர்.நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தெருக்களில் அதிகளவு தெரு நாய்கள் நடமாட்டம் உள்ளது.ஒரு தெருவில் குறைந்தது பத்து நாய்களுக்கு மேல் உள்ளன.இவை தெருக்களில் நடந்து செல்பவர்களை துரத்துவதும் கடிப்பதுமாக உள்ளது.இதனால் மக்கள் அச்சத்துடனேயே தெருக்களில் நடந்து செல்கின்றனர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது சில ஆண்டுக்கு முன்பு வரை தெரு நாய்களை பிடித்து வந்தனர். இதற்கு அரசு கட்டுபாடுகளை விதித்ததால் நாய்களை பிடிக்க முடியவில்லை.இதனால் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நாய்களை பிடித்து கருத்தடை செய்ய சொல்கின்றனர்.இதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லை.மேலும் செலவு அதிகமாகிறது.இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என கூறினர்.நாய்களை பிடிக்காவிட்டால் கூட பரவாயில்லை பிடித்து கருத்தடை செய்தால் வருங்காலத்திலாவது நாய்கள் எண்ணிக்கை உயராது என பொதுமக்கள் கூறினர்.