விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
மந்தாரக்குப்பம்: ஊராட்சிகளில் இளைஞர்களை ஊக்குவிக்கவும் தவறான வழிகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட், தடகளம், பூப்பந்து, உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டுள்ளனர். பலர் பல்வேறு போட்டிகளில், பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழிகளில் சிக்கி தடுமாறும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.