வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலம்
கடலுார் : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 01.01.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து. உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி மற்றும் அதற்கும் மேலாக படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து 31.12.2024 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. மேலும், குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள், 31.12.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கடலுார், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றவராகவோ அல்லது பெறுபவராகவோ இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்., 28ம் தேதி வரைஅனைத்து அலுவலக வேலை நாட்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.