உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பகுதிகளில் அரசு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறினார். என்.எல்.சி., நிறுவனம் இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ., நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களை கடந்த வாரம் கையகப்படுத்த முயன்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு சென்று மக்களை சந்தித்து நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின், அவர் கூறுகையில், 'இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாற்று இடம் வழங்க வேண்டும். என்.எல்.சி., சுரங்க பணிகளால் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் ஆதாரம் அழிந்து வருகிறது. இரண்டாம் சுரங்கத்தில் இருந்து முதல் சுரங்கத்திற்கு நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, காற்று மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !