முந்திரி மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
விருத்தாசலம் : பெலாந்துறை கிராமத்தில், முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி மரங்கள் பராமரித்தல் குறித்த விளக்க கூட்டம் நடந்தது.நல்லுார் அடுத்த பெலாந்துறை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் முந்திரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், தட்ப வெப்ப சூழல் மாற்றம் காரணமாக முந்திரி மகசூல் குறைவு, பூச்சு நோய் தாக்குதல் முதலியவை குறித்து விவசாயிகள் கவலையடைந்தனர்.அதைத்தொடர்ந்து, நல்லுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலெக்ஸ் தலைமையில், பெலாந்துறை கிராமத்தில், முந்திரி விவசாயிகளுக்கு பராமரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில், முந்திரி மகசூல் அதிகம் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகங்களான வி.ஆர்.ஐ., 3, எச்1 போன்ற ரகங்கள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தவறாது இயற்கை உரம் இட வேண்டும். ஊடுபயிராக உளுந்து, தட்டைப்பயிர் போன்ற பயறு வகைகள் பயர் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.மேலும், பருவமழை காலம் துவங்கும் முன், முந்திரி மரங்களின் இலைகளின் அடி பாகம் நனையும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் சேர்த்து நீரில் கரையக்கூடிய நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் ஹூமிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளையும் சேர்த்து அடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகரன், கந்தவேல் மற்றும் முந்திரி விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.