குடிநீர் வழங்காததை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
மரக்காணம்; மின்சாரம், குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மரக்காணம் அடுத்த புத்துப்பட்டு ஊராட்சி, மஞ்சங்குப்பம் கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், அந்த பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் இதுவரை மின்சாரம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.இதனால், ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல் இருப்பதால் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மரக்காணம் ஒன்றிய அலுவலகத்தை நேற்று மாலை 5:00 மணிக்கு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து 6:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.