அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கல்லுாரி மாணவர்கள் சாலை மறியல்
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்கள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் தேவனாம்பட்டினத்தில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி உள்ளது. இதில் 120மாணவர்கள் தங்கி படித்துவருகின்றனர். விடுதியில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் கழிவறையும் முறையாக இல்லாததால் அதிருப்தியடைந்த மாணவர்கள் நேற்று காலை 8மணிக்கு காலி பக்கெட்டுகளுடன் பெரியார் அரசு கலைக்கல்லுாரி முன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நேரில் வந்து உறுதியளித்தால் தான் போராட்டத்தைக்கைவிடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சங்கர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகளை சரிசெய்து தருவதாக உறுதி அளித்தார். இதையேற்று 9மணிக்கு, மாணவர்கள் போராட்டத்தைக்கைவிட்டு கலைந்து சென்றனர்.