வீட்டின் சுவர் இடிந்து தம்பதி படுகாயம்
திட்டக்குடி; திட்டக்குடி அருகே கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதி படுகாயமடைந்தனர்.திட்டக்குடி அடுத்த எழுமாத்தூரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 58. இவரது மனைவி காட்டுராணி, 48. கூலிதொழிலாளி. தம்பதி இருவரும் கூரை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12:00 மணியளவில் திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதி இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டு சுவர் நனைந்திருந்த நிலையில் விழுந்துள்ளது. அருகிலுள்ளவர்கள் இருவரையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல்சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சக்கரவர்த்தி தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த திட்டக்குடி கிழக்கு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கணேசன், வி.ஏ.ஓ., மகேந்திரன் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டனர். ஆவினங்குடி போலீசார் விசாரித்தனர்.