குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன்: கலெக்டர் தகவல்
கடலுார் : குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன கடன் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறலாம். கடன் பெற குறைந்தபட்ச வயது 18ம், அதிகபட்சமாக 65க்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய இரண்டு ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களாகவும் இருத்தல் அவசியம்.ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலுார் என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.