உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரே நாள் பெய்த மழையில் கடலுார் மாவட்டம் வெள்ளக்காடானது! 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

ஒரே நாள் பெய்த மழையில் கடலுார் மாவட்டம் வெள்ளக்காடானது! 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த அதி கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, இது புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலுார் உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் 'ரெட்' அலர்ட் விடுத்தது. அதன்படி கடலுாரில் நேற்று முன்தினம் காலை முதல் லேசான துாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாத பெய்த இந்த கனமழையால் கடலுார் மாநகரத்தில் அதிகபட்சமாக 17.9 செ.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக கடலுார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளக்காடானது. கடலுார் பீச்ரோடில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதேப்போல லாரன்ஸ் ரோடு, புதுப்பாளையம்ரோடு, போன்ற இடங்கள் தண்ணீரில் தத்தளித்தன. புருேஷாத்தம் நகர், குண்டு உப்பலவாடி, என்.ஜி.ஓ., நகர், பெரப்பன் குளம், பழமலை நகர், ஸ்ரீதேவி நகர், வண்டிப்பாளையம் ரோடு கண்ணகி நகர் உள்ளிட்ட பல இடங்கள் தண்ணீரில் மூழ்கின. துார்வாரவில்லை கடலுார் மாநகராட்சியில் சொல்லும் வேலை எதுவும் நடைபெறவில்லை என மேயர், கடந்த கூட்டத்தில் வேதனை தெரிவித்தார். அதன்படி கடலுார் மாநகராட்சியில் வடிகால் வாய்க்கால் எங்கும் துார் வாரப்படவில்லை. குறைந்தபட்சம் வாய்க்காலில் அடைபட்டு கிடந்த துவாரங்களில் மண் மேடுகளைக் கூட அகற்றப் படவில்லை. இதன்காரணமாகத்தான் அடிக்கடி பீச் ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. புதுப்பாளையம் சாலையில் மீண்டும் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்தை தடை செய்தது. இவ்வளவு செலவு செய்து கால்வாய் கட்டியும் கனமழையின்போது மக்களுக்கு பயன்படாமல் போனது. நெல் வயல் மூழ்கியது கனமழை காரணமாக சேத்தியாதோப்பு, புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, வடலுார், குறிஞ்சிப்பாடி, இரண்டாயிரம் விளாகம், களையூர், சிதம்பரம், பகுதிகளில் சம்பா நடவு செய்த நெல் வயல்கள் 30 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேற்கூரை இடிந்து தாய், மகள் பலி கடலுார் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தில் விவசாய கூலித்தொழிலாளி அசோதை 69; இவரது மகள் ஜெயா 40; இவருவரும் ஓட்டுவீட்டில் இருந்த போது, சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் இருவரும் இடிபாடுகளில் நசுங்கி பலியானார்கள். அதேப்போல நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள மூடப்பட்ட கடையில் மழைக்காக ராஜா, ரமேஷ், சுகாஷ் ஆகிய 3 வாலிபர்கள் ஒதுங்கி நின்றிருந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் 3 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை கனமழை காரணமாகவும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் தங்கள படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி