சேத்தியாத்தோப்பு பகுதியில் மின் மோட்டார் ஒயர் திருட்டு தொடரும் சம்பவங்களால் விவசாயிகள் அவதி
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில் மின் மோட்டார் ஒயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிடிவருகின்றனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி, ஓடாக்கநல்லுார், தரசூர் உள்ளிட்ட கிராமங்களில் போர்வெல் மூலம் சம்பா சாகுபடி நெல் நடவு செய்து வருகின்றனர். இதில் தேவன்குடி, ஓடாக்கநல்லுார், தரசூர் ஆகிய இடங்களில் நான்குபோர்வெல் மின் மோட்டார்களில் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் சம்பா நடவிற்காக நாற்றாங்கால் விடுதல், சேடை பாசனம் செய்தல், சேடை உழவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். போர்வெல் மின்மோட்டார்களில் விலை அதிகமுள்ள ஒயர்களில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்களை திருடுவதற்காக தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடந்தவருகிறது. மேலும், மோட்டார்களில் உள்ள ஸ்டார்ட்டர், பீஸ் கேரியர் ள்ளிட்ட மோட்டாரை இயக்குவதற்கான பொருட்களையும் திருடி சென்று விடுகின்றனர்.ஒயர் திருட்டு குறித்து போலீசில் புகார் கொடுத்தாலும் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறிவருகின்றனர். மேலும் இது போன்று சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசை காட்டிவருகின்றனர். எனவே போலீசார் தனிப்படை அமைத்து ஒயர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.