பகல் நேரங்களில் மின்மோட்டார்களை இயக்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கடலுார் : பகல் நேரங்களில் விவசாய மின் மோட்டார்களை இயக்குவதன் மூலம், இயற்கையான சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சார பயன்பாடு அதிகரித்து பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்கு விக்கலாம். இதுகுறித்து கடலுார் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி செய்திக்குறிப்பு: பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்கலாம். மேலும், மற்ற வளங்களைக் கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவினையும் குறைத்திடலாம். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிப்பாதையில் முன்னேறிடும் நோக்கில் பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்தட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.