உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதைப்பொருள் தடுப்பு எஸ்.ஐ., மீது கும்பல் தாக்குதல்

போதைப்பொருள் தடுப்பு எஸ்.ஐ., மீது கும்பல் தாக்குதல்

நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்டம், சிதம்பரம் கலால் பிரிவில் சப் - இன்ஸ்பெக்டராக தவசெல்வம் பணியாற்றுகிறார். இவர், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவிலும் கூடுதலாக பணியாற்றுகிறார். இவர் தலைமையிலான போலீசார், மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுத்து குற்றவாளிகளை கைது செய்கின்றனர். கடலுார் பகுதியில் தவசெல்வம் தலைமையிலான போலீசார் நேற்று, போதைப் பொருட்கள் விற்பனை செய்த இருவரை பிடித்து தங்களது ஜீப்பில் ஏற்றி சென்றனர். அப்போது அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டி காலனியில் கஞ்சாவை வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக கூறி, வீட்டின் அடையாளத்தை கூறினார்.அதையடுத்து, தாங்கள் பிடித்து வைத்திருந்த 2 குற்றவாளிகளுடன் தவசெல்வம் தலைமையிலான ஆறு போலீசார், அந்த மர்ம நபர் சொல்லிய இடத்துக்கு உடனடியாக சென்றனர். ஜீப்பில் குற்றவாளிகள் இருந்ததால், தன்னுடன் வந்த போலீசாரை அவர்களை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, சப் - இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தனியாக சென்றார்.குறிப்பிட்ட அந்த வீட்டில் இருந்த ஒருவரை அழைத்து தவசெல்வம் விசாரித்தார். அப்போது, திடீரென அவர்களை சூழ்ந்த மர்ம கும்பல், சப் - இன்ஸ்பெக்டர் தவசெல்வத்தை சுற்றி வளைத்து தாக்கியது. இதில் அவரது டீ - ஷர்ட் கிழிந்தது.தகவலறிந்த நெல்லிக்குப்பம், திருப்பாதிரிபுலியூர் போலீசார், 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும், சப் - இன்ஸ்பெக்டர் தவசெல்வத்தை தாக்கியவர்கள் தப்பியோடி விட்டனர். சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வத்துக்கு போன் செய்த நபரின் மொபைல் போன் நம்பரை வைத்து, அவர் யார்; சொல்லிய தகவல் உண்மையா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி